தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, பெட்ரோல் விலை உயர்வுக்கு பதில் இல்லை; கோலிக்கு மட்டும் பதிலா?- மோடியை விமர்சித்த நெட்டிசன்கள்
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, பெட்ரோல் உயர்வு குறித்த பிரதமர் மோடி மவுனம் காத்து வரும் நிலையில் கோலி விடுத்த உடற்பயிற்சி சவாலை ஏற்றுக் கொண்டதாக அவர் பதிவிட்டிருப்பது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய விளையாட்டுத் துறை அமைச்சரும், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவருமான ராஜ்யவர்தன் ரத்தோர் சமீபத்தில் இந்திய பிரதமர் மோடி மக்களுக்காக ஓய்வில்லாமல் உழைத்துக் கொண்டிருக்கிறார். அவருடன் இணைந்து பணியாற்ற நம் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வது அவசியம் என்று உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டிருந்தார். மேலும் கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு இந்த சவாலை விடுத்திருந்தார் ரத்தோர்.
ரத்தோரின் சவாலை ஏற்ற கோலி, உடற்பயிற்சி செய்யும் வீடியோவை இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டிருந்தார்.
மேலும் பிரதமர் மோடி, தோனி, அனுஷ்கா சர்மாவுக்கு இந்த சவாலை விடுக்கிறேன் என்று பதிவிட்டார்.
இந்தப் பதிவைக் குறிப்பிட்டு மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் ,"விராட் கோலி, உங்களின் உடற்தகுதி சவாலை ஏற்றுக்கொண்டுவிட்டேன். விரைவில் என்னுடைய உடற்தகுதி குறித்த வீடியோவை நான் ட்விட்டர் தளத்தில் பகிர்வேன்" என மோடி பதில் அளித்துள்ளார்.
மோடியின் இந்த ட்வீட்டைக் குறிப்பிட்டு நெட்டிசன்கள் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, பெட்ரோல் விலை குறித்து கருத்து தெரிவிக்காத பிரதமர் கிரிக்கெட் வீரர் விடுத்த சவாலை ஏற்று பதிலளித்திருக்கிறார் என்று கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.



Comments
Post a Comment