ஒரே நேரத்தில் இரு பெண்களுடன் திருமணம்: கால்பந்தாட்ட வீரர் ரொனால்டினோ அதிரடி முடிவு
பிரேசில் கால்பந்து அணியின் முன்னாள் வீரர் ரொனால்டினோ தான் காதலித்து வரும் இரு பெண்களை ஒரே சமயத்தில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். ஒரே நேரத்தில் இரு பெண்களை திருமணம் செய்வது சட்டவிரோதம் என்பதால், சட்ட சிக்கலில் இருந்து தப்பிக்க சில நடவடிக்கைகளையும் அவர் எடுத்து வருகிறார்.
பிரேசில் கால்பந்து வீரர் ரொனால்டினோ. 2002-ம் ஆண்டு பிரேசில் அணி உலககோப்பையை வெல்ல இவரது ஆட்டம் முக்கியமாக இருந்தது. மிகச்சிறந்த கால் பந்து வீரரான இவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உண்டு. குறிப்பாக பெண் ரசிகர்கள் அதிகம்.
இவரது காதல் தொடர்பாக அவ்வப்போது வதந்திகள் வெளி வருவதும் வழக்கம். ஓய்வு பெற்றாலும் கூட ரொனால்டினோவுக்கு ரசிகர்கள் எண்ணிக்கை குறையவில்லை. இந்நிலையில், பிரிஸிலா, பீட்ரிஸ் சவுசா ஆகிய இரண்டு பெண்களை காதலித்து வந்தார்.
இந்த இரு பெண்களுடன், ரொனால்டினோவுடன் ரியோடி ஜெனிரோவில் உள்ள சமீபகாலமாகவே ஒன்றாக வசித்து வருகிறார். எனினும் அதுபற்றி அவர் அதிகாரபூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை.
இந்நிலையில், அவர்களை அவர் ஒரே சமயத்தில் திருமணம் செய்ய முடிவு செய்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ரொனால்டினோவை திருமணம் செய்து கொள்வதில் இரு பெண்களும் பிடிவாதமாக உள்ளனர். இதனால் இருவரையும் ஒரே சமயத்தில் திருமணம் செய்ய அவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
திருமணத்திற்கு தேவையான மோதிரம், ஆடைகள், அணிகலன்கள் என அனைத்தையும் இரு பெண்களுக்கும் ஒரே மாடலில் வாங்கியுள்ளனர். திருமணத்திற்கான பொருட்களை வாங்க இரு பெண்களும் இணைந்தே சென்றுள்ளனர்.
சட்டப்படி இந்த திருமணம் செய்ய முடியாது என்பதால், தனிப்பட்ட முறையில் ரொனால்டினோவின் வீட்டிலேயே திருமணம் நடைபெறுகிறது. அவர் மீது போலீஸ் நடவடிக்கை பாயக்கூடும் என்பதால் அதனை திருமணம் என்று அழைக்காமல் வெறும் நிகழ்ச்சியாக அறிவிக்க ரொனால்டினோ திட்டமிட்டுள்ளார். ‘இது குடும்ப சந்திப்பு நிகழ்ச்சி’ என்று அறிவித்து விழாவிற்கு விருந்தினர்களை அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ரொனால்டினோ ஒரே நேரத்தில் இரு பெண்களை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளதற்கு அவரது சகோதரி சயாஸி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ரொனால்டினோ பெண்களை தவறாக வழி நடத்துவதாகவும் அவர் சாடியுள்ளார்.
திருமணத்தில் பங்கேற்கப்போவதில்லை என அறிவித்துள்ள அவர் சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் ரொனால்டினோவின் திருமணம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
எனினும், ரொனால்டினோ திருமணம் செய்ய முடிவு செய்துள்ள தகவலால் அவரது பெண் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். ட்விட்டர் இன்ட்ராகிராம் என சமூக வலைதளங்களில் ரொனால்டினோவை பின் தொடரும் ரசிகைகள் தங்கள் சோகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.



Comments
Post a Comment