ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரும் வழக்கை உடனே விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
புதுடெல்லி:
தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில், ஆலை இயங்குவதற்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வழங்கியிருந்த அனுமதி கடந்த மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்தது. அதன்பின்னர் அனுமதி புதுப்பிக்கப்படவில்லை. ஆலையின் பல்வேறு குறைபாடுகளை சுட்டிக்காட்டி, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்க மறுத்தது.
இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக முட உத்தரவிடக்கோரி நாகர்கோவிலைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தனது மனுவில், ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பட்ட பாதிப்புகளை சுட்டிக் காட்டியுள்ளார். மேலும், ஸ்டெர்லைட் ஆலையிடம் இருந்து அபராதமாக பெறப்பட்ட 100 கோடி ரூபாயை சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக தமிழக அரசு பயன்படுத்தியதா? என்று கேட்டிருந்தார்.
பிரச்சினையின் தீவிரம் கருதி, இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் மனுதாரர் கேட்டுக்கொண்டார். ஆனால், அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. கோடை விடுமுறைக்கு பிறகு இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Comments
Post a Comment